கடலூர் மாவட்டத்தில் 240 நகர பஸ்களில் கட்டணமில்லாமல் மகளிர்கள் பயணம்


கடலூர் மாவட்டத்தில் 240 நகர பஸ்களில் கட்டணமில்லாமல் மகளிர்கள் பயணம்
x
தினத்தந்தி 8 May 2021 4:22 PM GMT (Updated: 8 May 2021 4:22 PM GMT)

கடலூர் மாவட்டத்தில் 240 நகர பஸ்களில் கட்டணமில்லாமல் மகளிர்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.

கடலூர், 

மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற முதல் நாளிலேயே தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிர்களும் கட்டணமில்லாமலும், பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டத்தை நிறைவேற்றி கையெழுத்திட்டதோடு உடனடியாக இத்திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், இதன் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவு தொகையை அரசு மானியமாக வழங்கி ஈடுகட்டும் என்றும் அறிவித்தார்.

நகர பஸ்கள்

அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று முதல் அரசு போக்குவரத்துக்கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர்கள், உயர்கல்வி பயிலும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிர்களும் கட்டணமில்லாமலும், பஸ் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வந்தது.
இந்த திட்டத்தின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கடலூர் மண்டலங்களில் நேற்று 240 சாதாரண கட்டண நகர பஸ்களில் மகளிர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளை அந்தந்த போக்குவரத்து கழக பணிமனை அதிகாரிகள் செய்திருந்தனர்.

முககவசம் அணிந்தவர்களுக்கே அனுமதி

இதையொட்டி மகளிர் கட்டணமில்லா பயணம் என்ற ஸ்டிக்கர்கள் அச்சடிக்கப்பட்டு நகர பஸ்களில் முன்பக்கமும், பின்பக்க கண்ணாடிகளிலும் ஒட்டப்பட்டிருந்தது. அந்த பஸ்களில் மகளிர்கள் மகிழ்ச்சியுடன் ஏறி பயணம் செய்தனர். இவர்களில் முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோல் சிதம்பரம், விருத்தாசலம், வடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, நெய்வேலி உள்ளிட்ட அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் சார்பில் அந்தந்த பகுதியை சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கு நகர பஸ்கள் இயக்கப்பட்டன.இந்த பஸ்களில் மகளிர்கள் மகிழ்ச்சியுடன் ஏறி இலவசமாக பயணம் செய்தனர்.

Next Story