நகராட்சி பெண் ஊழியரிடம் தாலிச்சங்கிலி பறிப்பு


நகராட்சி பெண் ஊழியரிடம் தாலிச்சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 8 May 2021 7:52 PM GMT (Updated: 8 May 2021 7:52 PM GMT)

நகராட்சி பெண் ஊழியரிடம் தாலிச்சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச்சென்றனர்.

பெரம்பலூர்:
பெரம்பலூர் வடக்கு மாதவி ரோடு குறிஞ்சி நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் மருதராஜ். இவருடைய மனைவி ராஜலட்சுமி(வயது 39). இவர் பெரம்பலூர் நகராட்சி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று மாலை மருந்து வாங்குவதற்காக பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே உள்ள மருந்து கடைக்கு ஸ்கூட்டரில் வந்தார். அங்கு மருந்து வாங்கிய பின்னர், அவர் மீண்டும் வீட்டிற்கு ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார்.
அங்கிருந்து சிறிது தூரம் சென்றபோது, அந்த வழியாக பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ராஜலட்சுமியின் கழுத்தில் கிடந்த தாலிச்சங்கலியை பறிக்க முயன்றனர். ஆனால் சுதாரித்துக்கொண்ட ராஜலட்சுமி உடனடியாக ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு தாலிச்சங்கிலியை கையால் இறுக பற்றிக்கொண்டார். 
இதனால் 7 பவுன் தாலிச்சங்கிலி அறுந்ததில், 1 பவுன் மர்மநபர்கள் கையில் சிக்கியது. மீதமுள்ள 6 பவுன் ராஜலட்சுமி கையில் இருந்தது. இதையடுத்து ராஜலட்சுமி திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டதால், மர்மநபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூரில் கடந்த சில நாட்களாக தனியாக செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வரும் மர்மநபர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபடும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருவது, பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story