சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு உயிரிழந்தார்


சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு உயிரிழந்தார்
x
தினத்தந்தி 10 May 2021 4:50 AM GMT (Updated: 10 May 2021 4:50 AM GMT)

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நர்சு உயிரிழந்தார்.

சென்னை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையை சேர்ந்தவர் இந்திரா (வயது 41). இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு முதல் இவர், கொரோனா தொற்று தடுப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த மார்ச் மாதம் இவருக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறி இருந்தது. இதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் ஏப்ரல் 1-ந்தேதி ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் இவர் பல்வேறு இணை நோய்களால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. டாக்டர்கள் அளித்த சிகிச்சையில் உடல் நலம் தேறி வந்த நிலையில், நேற்று திடீரென நர்சு இந்திரா பரிதாபமாக உயிரிழந்தார்.

கடந்த கொரோனா அலையின்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வந்த தலைமை நர்சு ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். நேற்று மற்றொரு நர்சு ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் சக நர்சுகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story