காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 11 May 2021 5:44 AM GMT (Updated: 11 May 2021 5:44 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் மாவட்டத்தில் குடிமைப்பொருள் திட்டத்தின் கீழ் வரும் மே 15-ந்தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் தவணையாக வழங்க உள்ள நிலையில், வருகிற 12-ந்தேதி வரை டோக்கன் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய் தொற்று காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும் பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் அனைத்து ரேஷன் கடைகளிலும் மே மாதத்தில் அனைத்து அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2 ஆயிரம் நிவாரண தொகையினை முதல் தவணையாக வருகிற 15-ந் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.

மேற்படி நிவாரண தொகையினை மின்னணு குடும்ப அட்டை மூலமாகவும் அவ்வாறு குடும்ப அட்டை இல்லாத இனங்களில் இ-போஸ் டிவைஸ் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

டோக்கன்கள் வினியோகம்

மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடைகளில் குடும்ப அட்டைதாரர்கள் கூட்டமாக சென்று அத்தொகையினை பெறுவதை தவிர்க்கும் பொருட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி, நேரம் குறித்த விவரத்துடன் அடங்கிய டோக்கன்களை நியாய விலைக்கடை விற்பனையாளர் மூலமாக 12-ந் தேதிகளில் வீடுகள் தோறும் வழங்கப்படும்.

கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கனில் தெரிவிக்கப்பட்டுள்ள தேதிகளில் வழங்கப்பட உள்ள தொகையினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அதற்கான அட்டவணை பட்டியல் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் அறிவிப்பாக ஒட்டிவைக்கப்படும். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகாக போடப்பட்டுள்ள கட்டங்களில் 1 மீட்டர் சமூக இடைவெளியுடன் வரிசையில் நின்று நிவாரண உதவித் தொகை பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story