கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ


கொரோனாவால் சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு கேரள பெண் கண்ணீர் வீடியோ
x
தினத்தந்தி 13 May 2021 9:36 AM GMT (Updated: 13 May 2021 9:36 AM GMT)

கொரோனாவால் ஏற்கனவே சகோதரனை இழந்த நிலையில் உயிருக்கு போராடும் பெற்றோரை காப்பாற்ற உதவி கேட்டு சமூக வலைதளத்தில் கேரள பெண் கண்ணீர் மல்க வீடியோ பதிவிட்டுள்ளார்.

உதவி கேட்டு கண்ணீர்
ஆவடியை அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் வசிக்கும் ஐஸ்வர்யா (வயது 27) என்ற பெண், சமூக வலைதளங்களில் கண்ணீர் மல்க ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

கொரோனாவால் ஏற்கனவே எனது சகோதரனை இழந்து விட்ட நிலையில் தற்போது எனது தாய்-தந்தை இருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவருக்கும் உடனடியாக ஆக்சிஜன் படுக்கை வசதி தேவை. கேரளாவை சேர்ந்த நாங்கள், சென்னையில் குடியேறி விட்டோம்.எனது பெற்றோரை தவிர வேறு யாரும் எனக்கு துணை இல்லை. எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை. எனது கஷ்டத்துக்கு ஆறுதலாக சாய்ந்து கொள்ள தோள் கொடுக்கவும் யாரும் இல்லை. தமிழக மக்கள் எனக்கு உதவுங்கள். யாராவது என் பெற்றோருக்கு நல்ல ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் 
படுக்கை வசதிக்கு உதவி செய்யுங்கள்.இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறி இருந்தார்.

ஆக்சிஜன் படுக்கை வசதி
இந்த வீடியோவை பார்த்த சிலர், அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பண உதவி செய்ததோடு, அவரது தந்தையை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாயாருக்கு அங்கு படுக்கை வசதி இல்லாததால் ஆவடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இது தொடர்பாக ஐஸ்வர்யாவிடம் தொடர்பு கொண்டபோது அவர் கூறியதாவது:-
எனது தாயார் அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் ஆஸ்பத்திரி நிர்வாகம் தங்களிடம் ஆக்சிஜன் இருப்பு குறைந்துவிட்டதால் உங்கள் தாயை வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறிவிட்டனர். தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு எனது தந்தை ஒரு பக்கம், தாய் ஒரு பக்கம் உயிருக்கு போராடி வரும் நிலையில் எனக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் என்னையே என்னால் பார்த்துக்கொள்ள முடியவில்லை. எனது பெற்றோரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கண்ணீருடன் ெதரிவித்தார்.

Next Story