விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு அபராதம்


விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு அபராதம்
x
தினத்தந்தி 15 May 2021 7:11 PM GMT (Updated: 15 May 2021 7:11 PM GMT)

ஜெயங்கொண்டத்தில் விதிமுறைகளை பின்பற்றாத 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியில் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகளின்படி நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜெயங்கொண்டம் நகரில் கடைவீதி, 4 ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் உத்தரவை மீறி காலை 10 மணிக்கு பிறகும் நகைக்கடைகள், வளையல் கடைகள் இயங்கி வந்தன. இதையடுத்து ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஜெயங்கொண்டம் கடைவீதி பகுதியில் 10 மணிக்கு பிறகும் இயங்கி வந்த 2 நகைக்கடைகள், ஒரு வளையல் கடை, துணிக்கடை என 4 கடைகளுக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதில் 3 கடைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் ஒரு கடைக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.18 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அரசின் உத்தரவை கடைபிடிக்காமல் இதுபோன்று கடைகள் செயல்பட்டு வருவதை கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர், கடைக்காரர்களுக்கு எச்சரித்தார். ஆய்வின்போது ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ், ஜெயங்கொண்டம் துணை தாசில்தார் விமலா, வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, நகராட்சி தூய்மை பணி ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் பிரவீன்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.

Next Story