ஒரகடம் அருகே பழைய பொருட்களுக்கான குடோனில் தீ விபத்து

ஒரகடம் அருகே பழைய பொருட்களுக்கான குடோனில் தீ விபத்து ஏற்பட்டது.
படப்பை,
காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் அடுத்த வடகால் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பழைய பொருட்கள் சேமிப்பு குடோன் உள்ளது. இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று குடோனின் ஒரு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் தீ மள மளவென குடோன் முழுவதும் பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, குடோனில் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைகள் போன்றவை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருந்தது. தீயணைப்பு வீரா்கள் நீண்ட நேரமாக போராடி குடோனில் எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் குடோனில் இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள், அட்டைகள், மற்றும் கழிவுகள் அனைத்தும் எரிந்து நாசமானது. அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது.
தீ விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இ்துகுறித்து ஒரகடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






