லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது


லாரி உரிமையாளர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 May 2021 5:58 PM GMT (Updated: 19 May 2021 5:58 PM GMT)

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் லாரி உரிமையாளர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

திங்கள்சந்தை:
கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் லாரி உரிமையாளர் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.
 மீன் வியாபாரி கொலை
இரணியல் ஆர்.சி. தெருவை சேர்ந்த ஜான் மகன் சுஜித் (வயது 28), திருமணம் ஆகாதவர். இவர், திங்கள்சந்தையில் உள்ள மார்க்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வந்தார். 
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை சுஜித் தனது நண்பரான ஸ்டெபினை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் மாங்குழி நோக்கி சென்று கொண்டிருந்தார். மாங்குழி குளத்தங்கரைக்கு சென்றபோது, திங்கள்சந்தை அருகே பெரியபள்ளியை சேர்ந்த லாரி உரிமையாளரான சுரேஷ்(42) மற்றும் அவருடைய நண்பர் விமல் என்ற ராபி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் வந்து தகராறு செய்து சுஜித்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.
கள்ளக்காதல் தகராறு
இதுபற்றி தகவல் அறிந்த இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
அப்போது சுஜித்துக்கும் வாடிவிளையை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த பெண்ணுக்கு, சுரேசுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதனால், ஏற்பட்ட தகராறில் சுஜித் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்தது.  அதை தொடர்ந்து சுரேஷ், ராபி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.  
2 பேர் கைது
இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் இரணியல் அருகே ஆழ்வார் கோவில் சந்திப்பில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று சுரேஷ், ராபியை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர், அவர்கள் 2 பேரையும் இரணியல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது போலீசாரிடம் சுரேஷ் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
கள்ளக்காதலியுடனான...
எனக்கும் வாடிவிளையை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இந்த நிலையில் அந்த பெண் என்னுடன் கடந்த சில நாட்களாக பேசுவதை தவிர்த்து வந்தார். அதுபற்றி விசாரித்த போது தான், சுஜித்துக்கும் அந்த பெண்ணுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. 
இதனால், இளம்பெண்ணுடனான தொடர்பை கைவிடும்படி சுஜித்தை எச்சரிக்க போனில் மாங்குழி குளக்கரைக்கு வருமாறு அழைத்தேன். அதன்படி தனது நண்பருடன் வந்த அவரை, நானும் ராபினும் தடுத்து நிறுத்தி எச்சரித்்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது.  அப்போது, சுஜித்தை கொலை செய்து விட்டு நாங்கள் இருவரும் தப்பிச் சென்றோம். 
இவ்வாறு சுரேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் சிறையில் அடைத்தனர். 
 கடந்த 2003-ம் ஆண்டு நடந்த ஒரு கொைல வழக்கில் சுரேஷ் தொடர்புடைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story