தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்


தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்
x
தினத்தந்தி 19 May 2021 10:00 PM GMT (Updated: 19 May 2021 10:00 PM GMT)

தாளவாடி அருகே வாழை தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் செய்தன.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.
தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட சிக்கள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 31). விவசாயி. இவரது தோட்டம் வனப்பகுதியையொட்டி உள்ளது. தோட்டத்தில் அவர் 2 ஏக்கர் பரப்பளவில் கதலி வாழை சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று காலை மகேந்திரன் தனது வீடு அருகே உள்ள தோட்டத்துக்கு சென்று பார்த்தார். அப்போது வாழைகள் நாசமாகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானைகள் தோட்டத்துக்குள் புகுந்துள்ளன. பின்னர் தோட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
இதுபற்றி மகேந்திரன் தாளவாடி வனத்துறைக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு சென்று, சேதமடைந்த வாழைகளை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆறுதல் கூறினர். மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, ‘வனப்பகுதியை சுற்றி ஆழமாகவும், அகலமாகவும் அகழி அமைக்க வேண்டும்’ என்றனர்.

Next Story