குரோம்பேட்டையில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்


குரோம்பேட்டையில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சிகிச்சை மையம்
x
தினத்தந்தி 20 May 2021 12:13 PM GMT (Updated: 20 May 2021 12:13 PM GMT)

குரோம்பேட்டையில் 150 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை டிஆர்.பாலு எம்.பி. திறந்து வைத்தார்.

தாம்பரம்,

கொரோனா நோயாளிகளுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள வைஷ்ணவா கல்லூரியில் 150 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இதனை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் டி.ஆர்.பாலு எம்.பி. ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இதில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான்லூயிஸ், எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியா ராஜ், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சித்தா ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் மீனாகுமாரி, பல்லாவரம் நகராட்சி கமிஷனர் மதிவாணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் டி.ஆர்.பாலு எம்.பி. கூறியதாவது:-

ஆக்சிஜன் படுக்கை வசதி

கொரோனாவை ஒழிக்க தமிழக அரசு சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படுகிறது. அதற்காக அமைச்சர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள்.

இந்த ஆட்சி மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் இன்னும் ஒரு வார காலத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முயற்சியால் அதிக எண்ணிக்கையிலான ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story