பொதக்குடியில் கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு


பொதக்குடியில் கழிவுநீர் வடிகால்கள் தூர்வாரப்படுமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 20 May 2021 3:01 PM GMT (Updated: 20 May 2021 3:01 PM GMT)

பொதக்குடியில் கழிவுநீர் வடிகால்களை தூர்வார வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

கூத்தாநல்லூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடியில் 20-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு தெருக்களிலும் கழிவுநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கழிவுநீர் செல்லும் வடிகால்களில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. சில வடிகால்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இதனால் வடிகால் வழியாக கழிவுநீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. வீடுகள் ஓரத்திலேயே கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுகிறது.

கொசுக்கள் உற்பத்தி

தேங்கி உள்ள கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றன. கொரோனா பரவும் சூழலால் பொதுமக்கள் ஏற்கனவே அச்சத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் கழிவுநீர் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி இருப்பது தொற்று நோய் பரவ வழிவகுக்கும் என மக்கள் கவலைப்படுகின்றனர்.

துர்நாற்றம் வீசுவதால் வீடுகளில் வசிப்பதற்கே சிரமமாக உள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர். கழிவுநீர் தேங்காத வகையில் வடிகால்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதக்குடி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Next Story