புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.வருண்குமார் பொறுப்யேற்பு புகார்களை பதிவு செய்ய தொலைபேசி எண் அறிவிப்பு


புதிய போலீஸ் சூப்பிரண்டாக வி.வருண்குமார் பொறுப்யேற்பு புகார்களை பதிவு செய்ய தொலைபேசி எண் அறிவிப்பு
x
தினத்தந்தி 31 May 2021 6:08 AM GMT (Updated: 31 May 2021 6:08 AM GMT)

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த அரவிந்தன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்யேற்றார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்த அரவிந்தன் சென்னை தலைமை அலுவலகத்தில் தனிப்பிரிவு நுண்ணறிவு பிரிவில் போலீஸ் சூப்பிரண்டாக நேற்றுமுன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்தநிலையில், திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக வி.வருண்குமார் என்பவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், திருவள்ளூரில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று பதவியேற்று கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்படும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் குற்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க ஏதுவாக 6379904848 என்ற தொலைபேசி எண் தொடங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணில் பொதுமக்கள் எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொண்டு தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும் இந்த எண்ணில் வாட்ஸ்-அப் செயல்படுகிறது. அதில் வாய்ஸ் மெசேஜ், வீடியோ பதிவு மூலமாகவும், போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம். பொதுமக்கள் அளிக்கும் புகார்களை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டு, அதன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தற்போது தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக கடைபிடித்து கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வாகனங்களை எடுத்து கொண்டு சுற்றித் திரியக் கூடாது. அவ்வாறு சுற்றித் திரிவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story