பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் சாவு; மற்றொரு சம்பவத்தில் மீன்வியாபாரி பலி


பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் சாவு; மற்றொரு சம்பவத்தில் மீன்வியாபாரி பலி
x
தினத்தந்தி 7 Jun 2021 12:52 PM GMT (Updated: 7 Jun 2021 12:52 PM GMT)

பொன்னேரி அருகே மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலியானான். மற்றொரு சம்பவத்தில் மீன்வியாபாரி செத்தார்.

மின்சாரம் தாக்கியது
பொன்னேரி அடுத்த ஆத்தூரில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள காக்கனூர் கிராமத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 39) என்பவர் வேலை செய்து வருகிறார். இவரது மகன் கோகுலசாரதி(8).இந்த நிலையில் கோபாலகிருஷ்ணன் அந்த இடத்தில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வந்த நிலையில், நேற்றுமுன்தினம் அவரது மகன் கோகுலசாரதி மின்சார விசிறி பிளக்கை சுவிட்ச் பலகையில் சொறுகிய போது மின்சாரம் தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.தகவலறிந்த சோழவரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோகுலசாரதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மீன் வியாபாரி
கும்மிடிப்பூண்டி அடுத்த மாநெல்லூர் அருகே உள்ள குந்தலிமேடு கிராமத்தை சேர்ந்த மீன் வியாபாரி மோகன் ராவ் (48). இவர் நேற்று ஆரம்பாக்கம் அடுத்த பொதியாரங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு குளத்தில் வியாபாரத்திற்காக மீன் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது அங்கு இருந்த மின்மோட்டாரில் இருந்து மின்சாரம் பாய்ந்து மோகன் ராவ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story