வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை


வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
x
தினத்தந்தி 8 Jun 2021 4:44 PM GMT (Updated: 8 Jun 2021 4:44 PM GMT)

கொரோனா அச்சம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

வேதாரண்யம்:
கொரோனா அச்சம் காரணமாக  வேதாரண்யம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
ஊரடங்கில் தளர்வு

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஊரடங்கில் சில  தளர்வுகள் அளித்துள்ளது. இதில் மீன்களை மொத்த வியாபாரம் செய்யலாம் என்றும், மீன் சந்தைகள் இயங்கலாம் என அறிவித்துள்ளது.

மீன்பிடிக்க செல்லவில்லை

இந்த நிலையில் வேதாரண்யம் பகுதி மீனவ கிராமங்களின் கடற்கரைக்கு மீன்களை கொள்முதல் செய்ய பல்வேறு ஊர்களில் இருந்து வியாபாரிகள் வருவார்கள். இதனால் கிராம மக்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளதால் ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன்மகாதேவி கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. 
மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் படகுகளை கரைகளில் நிறுத்தி வைத்துள்ளனர்.

வெறிச்சோடிய கடற்கரை

ஒரு மாதமாக வேலை இழந்துள்ள மீனவர்கள் மீன்பிடி வலைகளை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா அச்சம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் சில்லறை வியாபாரிகள் மற்றும் மீன்பிடி தொழிலில் சம்பந்தப்பட்ட ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. 

Next Story