நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரவீன் நாயர் தகவல்


நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரவீன் நாயர் தகவல்
x
தினத்தந்தி 13 Jun 2021 12:25 PM GMT (Updated: 13 Jun 2021 12:25 PM GMT)

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்,

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் வகையில் முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருது 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது இந்த விருதுடன் ரூ.50 ஆயிரம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை வழங்கப்படும்.

இந்த ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.முதல்-அமைச்சர் இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் 15 முதல் 35 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்க கூடாது

தமிழ்நாட்டில் சமூக நலனுக்கான தொண்டு புரிந்தவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருக்க வேண்டும் (சான்று இணைக்க வேண்டும்). கடந்த நிதியாண்டில் (2020-2021) செய்யப்பட்ட சேவைகள் மட்டுமே கருதப்படும். (அதாவது 01.4.2020 முதல் 31.3.2021 வரை) விண்ணப்பதாரரின் சேவை தன்னார்வம் உடையதாகவும், சமுதாயம், சமூகத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை உண்டாக்கியதாகவும் இருக்க வேண்டும்.

விண்ணப்பதாரரின் சேவையானது தெளிவாக கண்டறியும் வகையிலும், அளவிடக் கூடியதுமாக இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள், பள்ளிகளில் பணிபுரிவோர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க தகுதி கிடையாது. சமூகத் தொண்டுகளில் பொதுவான ஈடுபாட்டுடன் செயல்பட்டவர்களாகவும், தாங்கள் வசிக்கின்ற பகுதிகளில் பொதுமக்களிடையே நன்மதிப்பு பெற்றவர்களாகவும் இருப்பது முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது தேர்வின் போது கருத்தில் கொள்ளப்படும்.

சேவைப்பணிகள்

ஊரகம் மற்றும் நகர்புற குடிசைப் பகுதிகளில் ஆற்றிய சேவைப்பணிகள், தேசிய ஒருமைப்பாடு, சாகசம், கலை மற்றும் மனமகிழ் செயல்பாடுகள், வயது முதிர்ந்தோருக்கான கல்வித்திட்டங்கள், சமூகத்தில் நலிந்த நிலையிலுள்ளவர்களின் நலன், பட்டியல் இனத்தோர், மலைவாழ் மக்கள் நலன், தேசிய நலன், சாரணர் மற்றும் வழிகாட்டுதல் மற்றும் உள்ளுர் தேவைகளுக்காகவும், முக்கிய நோக்கங்களுக்காகவும் பணிபுரிந்த விவரங்கள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். எனவே விண்ணப்பதாரர்கள் www.sdat.tn.gov.in என்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதள முகவரி மூலம் வருகிற 30-ந் தேதி அன்று மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அந்த அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story