ஸ்ரீமுஷ்ணம் அருகே கிணற்றில் மாணவர் பிணம்: உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


ஸ்ரீமுஷ்ணம் அருகே கிணற்றில் மாணவர் பிணம்: உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 22 Jun 2021 5:48 PM GMT (Updated: 22 Jun 2021 5:48 PM GMT)

ஸ்ரீமுஷ்ணம் அருகே கிணற்றில் மாணவர் பிணமாக கிடந்த நிலையில் அவரது உடலை வாங்க மறுத்து போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை யிட்டனா்.

ஸ்ரீமுஷ்ணம், 

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ன  ஸ்ரீநெடுஞ்சேரி காலனித்தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் தேவராஜன் (வயது 22). தொலைதூரக்கல்வி மூலம் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.  கடந்த 19-ந்தேதி மாயமான தேவராஜன், சாவடிக்குப்பத்தில்  உள்ள கிணற்றில் நேற்று முன்தினம் பிணமாக மீட்கப்பட்டார். 

இவர் சாவடிக்குப்பத்தில் ஒரு பெண்ணை காதலித்து வந்ததகாவும், அவர்களது தரப்பினர் தான் தேவராஜனை அடித்து கொன்று கிணற்றில் வீசி விட்டனர்.  எனவே இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் தேவராஜனின் உடலை பெற்றுக்கொள்வோம் என்று அவரது குடும்பத்தினா் தெரிவித்து வந்தனர். 

 நேற்று தேவராஜனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


அதில், தேவராஜனின் பிரேத பரிசோதனை முடிவின் படி அவர் கொலை செய்யப்பட்டதற்கான முகாந்திரம் இல்லை என்றும், தேவராஜன், அவரது காதலி ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். 


இதையடுத்து முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்ற அவர்கள், உடலை வாங்க முன்வரவில்லை. இதனால் அவரது உடல் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.


இதற்கிடையே தடயவியல் நிபுணர் சண்முகம் தேவராஜனின் பிணமாக மிதந்த கிணறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தடயங்கள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டார்.

Next Story