ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான வீரேந்தருக்கு 4 நாள் போலீஸ் காவல்


ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான வீரேந்தருக்கு 4 நாள் போலீஸ் காவல்
x
தினத்தந்தி 1 July 2021 10:48 AM GMT (Updated: 1 July 2021 10:48 AM GMT)

ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் கைதான வீரேந்தருக்கு 4 நாள் போலீஸ் காவல் சைதாப்பேட்டை கோர்ட்டு அனுமதி.

ஆலந்தூர்,

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையங்களில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்காமல் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நூதன முறையில் கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றன. இவ்வாறு 30-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம். மையங்களில் ரூ.1 கோடிக்கு மேல் கொள்ளை போனது. சென்னையில் மட்டும் ரூ.50 லட்சம் வரை கொள்ளை அடிக்கப்பட்டது.

இதுகுறித்து தனிப்படை போலீசார், சம்பவம் நடந்த ஏ.டி.எம். மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, கொள்ளையர்கள் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக அமீர் அர்ஷ், வீரேந்தர் ராவத், நஜிம் உசேன் ஆகிய 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கைதான வீரேந்தர் ராவத்தை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கோரி சைதாப்பேட்டை பெருநகர 18-வது நீதிமன்றத்தில் தரமணி போலீஸ் சார்பில் அரசு தரப்பு வக்கீல் எட்வர்ட் மனு தாக்கல் செய்தார். அதனை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியன், கொள்ளையன் வீரேந்தர் ராவத்தை 4 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

Next Story