அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு கிராம மக்கள் சாலை மறியல்


அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விவசாயி சாவு கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 1 July 2021 3:48 PM GMT (Updated: 1 July 2021 3:48 PM GMT)

அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

வாலாஜாபாத்,

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா தென்னேரி கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). விவசாயி. வயல் வேலைக்கு சென்றுவிட்டு கட்டவாக்கம் பகுதியில் இருந்து தென்னேரி நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சங்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

மறியல்

இதுகுறித்து தகவலறிந்த தென்னேரி கிராம மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். விபத்து குறித்தும் கிராம மக்களின் சாலை மறியல் குறித்தும் தகவல் அறிந்து காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் தலைமையில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

வாலாஜாபாத்- சுங்குவார்சத்திரம் நெடுஞ்சாலை மஞ்சமேடு பகுதியில் நடைபெறும் மேம்பால பணிக்காக மண் கொண்டு வந்து கொட்டி சென்ற லாரியால் சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பி அறுந்தது.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை.

அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி

மேம்பாலம் கட்டுபவர்களின் அஜாக்கிரதையாலும், மின்வாரிய ஊழியர்களின் அலட்சியத்தாலும் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த சங்கரின் மனைவியும், இரு மகள்களும் வாழ்வாதாரத்தை இழந்து விட்டதால் அவரது குடும்பத்தினரில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய இழப்பீட்டையும் வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

வருவாய்த்துறையினரும், போலீசாரும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைப்பதாக உறுதி அளித்ததன் பேரில் கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து சங்கரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story