மயிலாடுதுறையில், பழமை வாய்ந்த கருவாடு சந்தை திறப்பு


மயிலாடுதுறையில், பழமை வாய்ந்த கருவாடு சந்தை திறப்பு
x
தினத்தந்தி 11 July 2021 5:28 PM GMT (Updated: 11 July 2021 5:28 PM GMT)

60 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த கருவாடு சந்தை நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள், வியாபாரிகள் வந்து கருவாடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

மயிலாடுதுறை:
60 நாட்களுக்கு பிறகு மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த கருவாடு சந்தை நேற்று திறக்கப்பட்டது. இங்கு பொதுமக்கள், வியாபாரிகள் வந்து கருவாடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
கருவாடு சந்தை
மயிலாடுதுறை ெரயிலடியில் சித்தர்காடு பகுதியில் 100 ஆண்டுகள் பழைமையான கருவாடு சந்தை அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகள் தோறும் கருவாடு சந்தை நடைபெறும். மயிலாடுதுறை மாவட்ட கடற்கரையோர பகுதிகளான தரங்கம்பாடி, பூம்புகார், சின்னங்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கருவாடுகளை இந்த சந்தைக்கு கொண்டுவந்து விற்பனை செய்யப்படுகிறது.
இந்த கருவாடு சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்து வியாபாரிகளும், பொதுமக்களும் வந்து வாங்கி செல்கின்றனர். கொரோனா 2-வது அலையை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கருவாடு சந்தையை திறக்க தடை விதிக்கப்பட்டது.
60 நாட்களுக்கு பிறகு திறப்பு
இந்த நிலையில் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டதால்,  சித்தர்காடு கருவாடு சந்தை கடந்த 60 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இங்கு  பொதுமக்கள மற்றும் வியாபாரிகள் ஆர்வமுடன் வந்து கருவாடுகளை வாங்கி சென்றனர். 
வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர். 
குறைந்த விலையில் விற்பனை
சந்தையில் கொடுவா, சுறா, திருக்கை, இறால் உள்ளிட்ட 40 வகையான கருவாடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த கருவாடுகளை மக்கள் விரும்பி வாங்கிச் சென்றனர். 
60 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட கருவாடு சந்தையில் கருவாடுகள் அனைத்தும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டதாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Next Story