காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு


காஞ்சீபுரத்தில் உலக மக்கள் தொகை தினவிழா உறுதிமொழி ஏற்பு
x
தினத்தந்தி 12 July 2021 5:09 AM GMT (Updated: 12 July 2021 5:09 AM GMT)

2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கின்படி தமிழகத்தில் 8.36 கோடி மக்கள்தொகை உள்ளனர். இதில் ஆண்கள் 4.19 கோடியும், பெண்கள் 4.17 கோடியும் உள்ளனர். காஞ்சீபுரம் மாவட்டத்தில் மொத்த மக்கள்தொகை 12 லட்சத்து ஆயிரத்து 788 ஆகும்.

இதில் 6 லட்சத்து 5 ஆயிரத்து 620 ஆண்களும், 5 லட்சத்து 96 ஆயிரத்து 168 பெண்களும் உள்ளனர். உலக மக்கள் தொகை தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11-ந் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நிகழ்ச்சிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி காஞ்சீபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உலக மக்கள் தொகை தினத்தையொட்டி நிகழ்ச்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட கலெக்டர் தலைமையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகளுடன் உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்று, ஓவிய போட்டியில் வெற்றி பெற்ற நர்சிங் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார்.அதனை தொடர்ந்து உலக மக்கள் தொகை தினத்தையொட்டி காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களுக்கு குடும்ப நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் ஜீவா, மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை துணை இயக்குநர் குருநாதன், ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் கல்பனா, குடும்ப நல வட்டார விரிவாக்க கல்வியாளர் தாரணிபிரபா, மாவட்ட புள்ளி விவர உதவியாளர் மாரிமுத்து, வட்டார சுகாதார புள்ளியியலாளர் சந்தோஷம் மற்றும் நர்சிங் பயிற்சி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story