ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 13 July 2021 10:47 PM GMT (Updated: 13 July 2021 10:47 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கோவிஷில்டு தடுப்பூசி
கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க அரசு சார்பில் முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 4 லட்சத்து 78 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவது குறைவு என்பதால் பொதுமக்கள் தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ந் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த 7 மற்றும் 8-ந் தேதிகளில் கோவிஷில்டு தடுப்பூசி 2-ம் டோஸ் மட்டும் பொதுமக்களுக்கு போடப்பட்டது.
10,700 பேர்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் நேற்று முன்தினம் வந்தது. இதைத்தொடர்ந்து தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும் பிரித்து அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் மாவட்டத்தில் 111 மையங்களில் பொதுமக்களுக்கு கோவிஷில்டு தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போடும் பணி நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 107 மையங்களில் கோவிஷில்டு தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. வழக்கம்போல் இரவிலேயே பொதுமக்கள் தடுப்பூசி போடும் மையங்களில் குவிய தொடங்கினர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர். ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. நேற்று ஒரே நாளில் 10 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் 20 இடங்களில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடப்பட்டது.

Next Story