அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் சரத்குமார் வேண்டுகோள்


அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் சரத்குமார் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 July 2021 2:09 PM GMT (Updated: 14 July 2021 2:09 PM GMT)

அனைவரும் உடல் உறுப்பு தானம் செய்யுங்கள் சரத்குமார் வேண்டுகோள்.

சென்னை,

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று (புதன்கிழமை) தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எனது பிறந்தநாள் செய்தியாக எனது இயக்கத்தினருக்கு மட்டுமன்றி, அனைவரிடமும் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். உடலுறுப்பு கிடைக்காமல் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோவதை பார்க்கும்போது, ரத்ததானம் செய்வது போன்று உடலுறுப்பு தானம் செய்வதும் மிக மிக அவசியம் என கருதுகிறேன்.

நான் ஏற்கனவே உடலுறுப்பு தானம் செய்திருப்பதை அனைவரும் அறிவீர்கள் என எண்ணுகிறேன். உயிரிழப்புகளை தடுக்கும் விழிப்புணர்வு முயற்சியில் என் அன்பு சகோதர, சகோதரிகளும் தங்களை ஈடுபடுத்தி கொண்டு தாமதிக்காமல் உடலுறுப்பு தானம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘சரத்குமார் பிறந்தநாளில் ஆடம்பர கொண்டாட்டங்களை தவிர்த்து அமைதியான முறையில் ரத்ததானம், உடலுறுப்பு தானம் செய்வது, ஆதரவற்ற ஏழைகளுக்கு அன்னதானம் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது, கோவில்களில் பிரார்த்தனை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Next Story