கொங்குநாடு பிரிவினை முழக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம்


கொங்குநாடு பிரிவினை முழக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம்
x
தினத்தந்தி 15 July 2021 1:54 PM GMT (Updated: 15 July 2021 1:54 PM GMT)

கொங்குநாடு பிரிவினை முழக்கத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீர்மானம்.

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் 2 நாட்கள் நடைபெற்றது. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் டி.கே.ரங்கராஜன், அ.சவுந்தரராஜன், உ.வாசுகி, பி.சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள பா.ஜ.க.வினர் பலரும் மேற்கு மாவட்டங்களை தனியாக்கி கொங்கு நாடாக அறிவிக்க வேண்டும் என பேசி வருகின்றனர். இதுதொடர்பாக கோவை மாவட்ட பா.ஜ.க. தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாகவும் தெரிகிறது.

விடுதலை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் இயல்பான தேர்வாக அமைந்தது மொழிவாரி மாநிலங்கள். விடுதலை போராட்டத்தில் எந்த பங்களிப்பும் செய்யாத, சங்க பரிவாரத்துக்கு இதுகுறித்த அக்கறையோ, மக்கள் நலன் குறித்த பொறுப்புணர்வோ கொஞ்சமும் இல்லை. அதிகாரத்தை குவித்துக் கொள்வதில் உள்ள வேட்கையே இத்தகைய துண்டாட்ட நிகழ்ச்சி நிரலின் ஒற்றைக் காரணியாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றினால் மக்கள் மடிந்துக் கொண்டிருக்கும் சூழலிலும், அதிலிருந்து மீள தேவையான அக்கறையை காட்டாத சங்க பரிவாரத்தினர், திசை திருப்பல் நோக்கில் மக்களை துண்டாட முன்னெடுக்கும் முயற்சிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

மேற்கண்டவாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story