புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை


புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை
x
தினத்தந்தி 15 July 2021 3:27 PM GMT (Updated: 15 July 2021 3:27 PM GMT)

புதுச்சேரியை போல தமிழகத்திலும் பள்ளிகள் திறக்கப்படுமா? கல்வித்துறை அதிகாரிகள் நாளை முக்கிய ஆலோசனை.

சென்னை,

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு தமிழகத்தில் சற்று குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கடந்த கல்வியாண்டின் இறுதியில் பள்ளிகள் திறக்கப்பட்டன. பின்னர் மீண்டும் தொற்று அதிகரித்ததால் பள்ளிகள் மூடப்பட்டன.

அதன்பிறகு தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டே இருக்கின்றன. இந்த நிலையில் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் திறக்கப்பட இருக்கின்றன. அதேபோல தமிழகத்திலும் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி சமீப நாட்களாக எழுந்தவண்ணம் உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர்தான் முடிவுகளை அறிவிப்பார் என்று பள்ளிக்கல்வி, உயர்கல்வித் துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் நாளை (வெள்ளிக்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதில் பள்ளிகள் திறப்பு, மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, விலையில்லா பாடப்புத்தகங்கள், மடிக்கணினி வழங்கப்பட்ட விவரம், பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது உள்பட பல்வேறு விஷயங்கள் பேசப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் ஆகியவற்றின் அடிப்படையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிகள் திறப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Next Story