காமராஜர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பேரணி


காமராஜர் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் கட்சியினர் பேரணி
x
தினத்தந்தி 16 July 2021 12:24 PM GMT (Updated: 16 July 2021 12:24 PM GMT)

காமராஜர் பிறந்தநாளையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

சென்னை,

காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இருந்து பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பகல் 11 மணிக்கு இந்த பேரணி தொடங்கியது. பேரணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகர், எம்.எஸ்.திரவியம், எம்.பி.ரஞ்சன்குமார், நாஞ்சில் பிரசாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவ் பேரணியை தொடங்கி வைத்து பேசினார்.

தலைவர்களும் நடந்துசென்றனர்

இந்த பேரணியில் முன்னாள் தலைவர் தங்கபாலு, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, பொதுச்செயலாளர்கள் சிரஞ்சீவி, தளபதி பாஸ்கர், மாநில செயலாளர் அகரம் கோபி உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொண்டர்களுடன் தினேஷ்குண்டுராவ், கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும் நடந்து சென்றனர். பேரணி தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தூரம் உள்ள காமராஜர் இல்லத்தில் நிறைவடைந்தது.

2 மணி நேரம் பேரணி

பேரணியில் திரளானவர்கள் பங்கேற்றதால் பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த பேரணி மதியம் 1 மணிக்கு நிறைவு பெற்றது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‘தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய உறுதி ஏற்போம்' என்று கோஷமிட்டபடி சென்றனர்.

Next Story