போலி கால்நடை மருத்துவர்களுக்கு அபராதம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை


போலி கால்நடை மருத்துவர்களுக்கு அபராதம்- கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை
x
தினத்தந்தி 16 July 2021 10:57 PM GMT (Updated: 16 July 2021 10:57 PM GMT)

போலி கால்நடை மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஈரோடு
போலி கால்நடை மருத்துவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணி எச்சரிக்கை விடுத்து உள்ளார். 
பதிவு பெற்ற மருத்துவர்கள்
ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கால்நடை மருத்துவ பேரவை எனப்படும் வெட்னரி கவுன்சிலில் பதிவு செய்து கொண்ட கால்நடை மருத்துவர்கள் மட்டுமே கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் பல இடங்களில் போலி கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் போலி கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் கால்நடைகளுக்கு ஏற்படும் சிகிச்சை குறைபாடுகளுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு வழங்காத நிலையும் உள்ளது.
சினை ஊசி பணியாளர்கள்
குறிப்பாக மாடுகளுக்கு சினை ஊசி போடுவதற்கு பயிற்சி பெற்ற செயற்கை முறை கருவூட்டல் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் கால்நடை மருத்துவர்கள் இல்லை. ஆனால் சிலர் கால்நடை மருத்துவர்கள் என்று சிகிச்சைகள் அளித்து வருகிறார்கள். இது முற்றிலும் தவறானதாகும். அவர்கள் சினை ஊசி போடுவதற்கு மட்டும் 3 மாதம் பயிற்சி பெறுகிறார்கள். கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்கள், அதற்கான சிகிச்சைகள் வழங்கும் பயிற்சி என எதுவும் தெரியாது.
அபராதம்
எனவே விவசாயிகள் பதிவு பெற்ற கால்நடை மருத்துவர்களை மட்டுமே கால்நடை சிகிச்சைக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். போலி கால்நடை மருத்துவர்கள் குறித்த தகவலை மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார்கள் வழங்கலாம்.
போலி கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது கண்டறியப்பட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அவர்கள் 2-வது முறையில் சிக்கினால் ரூ.1,000 அபராதத்துடன் 6 மாதம் ஜெயில் தண்டனையும் வழங்கப்பட சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்.

Next Story