பவானி அருகே பயங்கரம் நடத்தை சந்தேகத்தால் கழுத்தை இறுக்கி பெண் கொலை கணவர் வெறிச்செயல்


பவானி அருகே பயங்கரம் நடத்தை சந்தேகத்தால் கழுத்தை இறுக்கி பெண் கொலை கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 17 July 2021 9:30 PM GMT (Updated: 17 July 2021 9:30 PM GMT)

பவானி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

பவானி அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு பெண்ணை கழுத்தை இறுக்கி கொன்று வெறிச்செயலில் ஈடுபட்ட கணவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
நடத்தையில் சந்தேகம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பையை சேர்ந்தவர் கருப்பன் (வயது 30). இவர் வாடகைக்கு சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தார். சித்தோடு கொங்கம்பாளையம் அம்பேத்கர் வீதி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகள் ரேவதி (28). இவருக்கும், கருப்பனுக்கும்  கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரோகித், யஸ்வந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் கொங்கம்பாளையத்தில் வசித்து வந்தனர். ரேவதி அதே பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு ஆயாவுக்கு உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் ரேவதி நடத்தையில் கருப்பனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது.
கழுத்தை இறுக்கி பெண் கொலை
அதேபோல் நேற்று முன்தினம் இரவு  கருப்பனுக்கும், ரேவதிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கருப்பன், ரேவதியின் கழுத்தை கைகளால் நெரித்துள்ளார். இதில் அவர் உயிருக்கு போராடினார். இதனால் கருப்பன் அருகே கிடந்த ஒரு துண்டு வேட்டியை எடுத்து மனைவியின் கழுத்தை இறுக்கியுள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
 இதுபற்றி அவர் கோபியில் உள்ள ரேவதியின் அண்ணன் சோமசுந்தரத்தை தொலைபேசியில் அழைத்து, ‘உன் தங்கையின் போக்கு சரியில்லை எனவே அவளை கொன்று விட்டேன்’ என கூறி விட்டு தலைமறைவாகி விட்டார்.
கணவருக்கு வலைவீச்சு
இதுபற்றி  தெரிய வரவே ஆறுமுகம், அவரது மனைவி குப்பாயி ஆகியோர் உடனே அருகே உள்ள மகள் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ரேவதி பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதனர்.
 இதுகுறித்து சித்தோடு போலீஸ் நிலையத்துக்கு ஆறுமுகம் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, ரேவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய கருப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியின் கழுத்தை இறுக்கி கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story