படப்பை அருகே தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்


படப்பை அருகே தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 20 July 2021 12:33 AM GMT (Updated: 20 July 2021 12:33 AM GMT)

படப்பை அருகே தனியார் தொழிற்சாலை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.

படப்பை,

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த சாலமங்கலம் சிறுமாத்துர் கிராமத்தில் கார் முகப்பு விளக்குகளுக்கு பயன்படுத்தப்படும் கேபிள் ஒயர் தயாரிக்கும் தொழிற்சாலை மற்றும் அலுவலகம் உள்ளது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் திடீரென தொழிற்சாலையின் அலுவலக பகுதியில் ஜெராக்ஸ் எந்திரம் தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி தொழிற்சாலை முதல் தளத்தில் பற்றிக்கொண்டதில் புகை மூட்டமானது.

இதனைப்பார்த்த தொழிற்சாலையின் காவலாளி மற்றும் அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்துக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

பொருட்கள் நாசம்

தீயணைப்பு வீரா்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் போராடி எரிந்த தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த ஜெராக்ஸ் எந்திரம், கேபிள் ஒயர்கள், மெத்தை நாற்காலிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது.

தீ விபத்தினால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் குடியிருப்பு பகுதியில் இருந்த மக்கள் அச்சமடைந்தனர். இதனால் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த தீ விபத்துக்கான காரணம் மின்கசிவா? அல்லது வேறு தேனும் கரணமா? என்பது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story