ஈரோடு மாநகாில் குண்டும்-குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை


ஈரோடு மாநகாில் குண்டும்-குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 July 2021 9:03 PM GMT (Updated: 20 July 2021 9:03 PM GMT)

ஈரோடு மாநகரில் குண்டும்-குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஈரோடு
ஈரோடு மாநகரில் குண்டும்-குழியுமான ரோடுகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
வளர்ச்சித்திட்ட பணிகள்
ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டம் உள்ளிட்ட வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகின்றன. பாதாள சாக்கடை திட்டம் சுமார் 13 ஆண்டுகளாகவும், ஊராட்சிக்கோட்டை திட்டம் சுமார் 4 ஆண்டுகளாகவும் தொடர்ந்து நடந்து வருகிறது.
பாதாள சாக்கடை திட்டம் கடந்த தி.மு.க. ஆட்சியின்போது 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று தொடங்கப்பட்டது. ஆனால் இன்னும் அந்த பணிகள் முடியவில்லை. அதுமட்டுமின்றி பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள் புதுப்பிக்கப்படாமல் கிடக்கிறது. ஏற்கனவே ரூ.500 கோடிக்கும் மேல் பாதாள சாக்கடை திட்டத்துக்காக செலவிட்ட நிலையில், புதிதாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருகிறது.
காவிரி ரோடு
ஈரோடு நகரின் முக்கிய பகுதிகளான காவிரி ரோடு, மணிக்கூண்டு, கடைவீதி பகுதிகளில் தற்போது பாதாள சாக்கடை திட்டத்துக்காக குழிகள் தோண்டப்பட்டு குழாய் பதிக்கப்பட்டு இருக்கிறது. இது எப்போதும் நெரிசல் மிகுந்த பகுதி. ஈரோட்டில் இருந்து நாமக்கல், சேலம் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். சென்னை செல்லும் வாகனங்களும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. ஆனால், சாலை உடைக்கப்பட்டு குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் தடுமாறி வருகிறார்கள்.
அது மட்டுமின்றி, தார் ரோடு முழுவதும் மண் கொட்டப்பட்டு மண் ரோடாக காட்சி அளிக்கிறது. வாகனங்கள் செல்லும்போது அந்த பகுதி முழுவதும் புழுதி பறக்கிறது. முக்கியமன குடியிருப்பு மற்றும் வணிகப்பகுதியாக இது உள்ளது. இங்கு புழுதி காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சாலையின் உயரம்
இதுபற்றி அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கூறும்போது, காவிரி ரோட்டில் சாலை போடும்போதெல்லாம் சாலையின் உயரத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். இப்போது பாதாள சாக்கடை குழாய்கள் போட்ட பிறகு குவிந்து கிடக்கும் மண் ஒரு அடிக்கும் மேல் உயரமாக உள்ளது. ஒரு பக்கம் சாலை பள்ளமாகவும், இன்னொரு பக்கம் உயரமாகவும் இருக்கிறது. தற்போது மழை பெய்யும்போது மழை நீர் அருகில் உள்ள வீடுகள், கடைகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே உடனடியாக சாலை மட்டத்துக்கு மேல் உள்ள மண் அகற்றும் பணியை அதிகாரிகள் செய்ய வேண்டும். மேலும் சாலை புதிதாக போடும்போது ஏற்கனவே உள்ள மட்டத்துக்கு மேல் உயரம் ஆகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது மட்டுமின்றி திண்டல் சக்தி நகர், வீரப்பன்சத்திரம் பாரதி தியேட்டர் ரோடு உள்பட மாநகரின் பல பகுதிகளிலும் பாதாள சாக்கடை மற்றும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக காணப்படும் ரோடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள்  கோரிக்கை  விடுத்து உள்ளனர்.

Next Story