கடம்பூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை


கடம்பூர் அருகே வனப்பகுதியில் இறந்து கிடந்த சிறுத்தை
x
தினத்தந்தி 20 July 2021 9:26 PM GMT (Updated: 20 July 2021 9:26 PM GMT)

கடம்பூா் வனப்பகுதியில் சிறுத்தை இறந்து கிடந்தது.

டி.என்.பாளையம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட எக்கத்தூர் பகுதியில் கடம்பூர் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள தொட்டிமடுவு காவல் சுற்று பகுதியில் வனப்பகுதிக்குள் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்ததை கண்டனர். உடனே அவர்கள் இதுகுறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பக டாக்டர் அசோகனுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் டாக்டர் அசோகன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டார். பின்னர் இறந்து கிடந்த சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தார். இதைத்தொடர்ந்து சிறுத்தையின் உடல் பாகங்கள் உடற்கூராய்வு செய்வதற்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டர் அசோகன் கூறுகையில், ‘இறந்த சிறுத்தை 5 வயது உடைய ஆண் சிறுத்தை ஆகும். சிறுத்தையின் உடல் பாகங்கள் பரிசோதனைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. பரிசோதனையின் முடிவில்தான் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியும்,’ என்றார். இதையடுத்து சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது.

Next Story