பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை


பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 7:42 PM GMT (Updated: 21 July 2021 7:42 PM GMT)

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

காரைக்குடி,

பக்ரீத் பண்டிகையையொட்டி பள்ளிவாசல்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

பக்ரீத் பண்டிகை

முஸ்லிம்கள் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகையும் ஒன்று. இந்த பக்ரீத் பண்டிகை நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா பாதிப்பு காரணமாக பக்ரீத் பண்டிகை எளிமையாக கொண்டாடப்பட்டது.
 பொதுவாக ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகையின் போது சிவகங்கை மாவட்டத்தில் அந்தந்த பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் அதிகாலை சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

சிறப்பு தொழுகை

காரைக்குடி காட்டுத்தலைவாசல் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் காலை 7.15 மணிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர். மேலும் அந்த பகுதியில் உள்ள வீடுகளின் மாடியில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் இந்த சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டனர்.
இதே போல் செஞ்சை பள்ளிவாசலில் அதன் தலைவர் ஹனிபா, அண்ணாநகர் பள்ளிவாசலில் ஜின்னா, என்.ஜி.ஓ. காலனி பள்ளிவாசலில் ஹாஜி அலாவுதீன், அலியார்புரம் பள்ளிவாசலில் பக்கீர் முகமது, காட்டு தலைவாசல் பள்ளிவாசலில் சாகுல் ஹமீத், காலேஜ் பள்ளிவாசலில் நைனா முகமது, முத்துப்பட்டணம் பள்ளிவாசலில் முகைதீன் பிச்சை, மகபூப்பாளையம் பள்ளிவாசலில் தீன் முஹம்மது, பஜார் பள்ளிவாசலில் அலி மஸ்தான், பஸ் ஸ்டாண்ட் பள்ளிவாசலில் சாதிக், அமானத் நகர் பள்ளிவாசலில் அப்துல் ரஹ்மான் ஆகியோர் தலைமையில் பள்ளிவாசல் இமாம்கள் சிறப்பு தொழுகையினை நடத்தினர். சிறப்பு தொழுகையில் ஐக்கிய ஜமாஅத் தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் அலிமஸ்தான், பொருளாளர் சாதிக், சிவகங்கை மாவட்டஜமாஅத் செயலாளர் கலீல் ரஹ்மான், காரைக்குடி நகர இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்க தலைவர் அப்பாஸ், செயலாளர் ராஜா முஹம்மது, பொருளாளர் ஷாஜகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரியாணி வழங்கினர்

இதேபோல் திருப்பத்தூரில் பெரிய பள்ளிவாசல், மஜீத்நூர் பள்ளிவாசல், கான்வாநகர் பள்ளிவாசல், அச்சுக்கட்டு பள்ளிவாசல், சமஸ்கான் பள்ளிவாசல், தென்மாப்பட்டு பள்ளிவாசல், மின்நகர் பள்ளிவாசல், புதுப்பட்டி பள்ளிவாசல் ஆகிய இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது.
மேலும் சிவகங்கை, சிங்கம்புணரி, தேவகோட்டை, காளையார்கோவில், இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். தியாக திருநாளையொட்டி ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

Next Story