மதுரை,
திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரதிபிரியா (வயது 21). இவருக்கு மதுரையில் ராணுவத்திற்கு ஆள் எடுப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுரை வந்த ரதிபிரியா சொக்கிக்குளத்தில் உள்ள தனியார் விடுதியில் பணம் கொடுத்து தங்கியிருந்தார். அப்போது அவர் உடன் தங்கியிருந்த 2 பெண்களின் செல்போன்களை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து சரமாரியாக தாக்கி, போலீசில் ஒப்படைத்தனர். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ரதிபிரியா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்த அவரை தல்லாகுளம் போலீசார் செல்போன் திடியதாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர். சிகிச்சைக்கு பின்னர் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.
மேலும் ரதிபிரியா போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை பெண் என்று பார்க்காமல் சரமாரியாக தாக்கி காயப்படுத்திய விடுதியில் தங்கியிருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதன் பேரிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.