ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்களில் 19,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்களில் 19,550 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 23 July 2021 9:51 PM GMT (Updated: 23 July 2021 9:51 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்கள் மூலம் நேற்று 19 ஆயிரத்து 550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 113 மையங்கள் மூலம் நேற்று 19 ஆயிரத்து 550 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கொரோனா தடுப்பூசி
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க ஈரோடு மாவட்டத்தில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தற்போது 2-வது அலை குறைந்து வரும் நிலையில் 3-வது அலையில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதற்காக பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
19,550 பேர்
இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி, நம்பியூர், சென்னிமலை, திங்களூர், புளியம்பட்டி, குருவரெட்டியூர், அத்தாணி, பவானி, சிவகிரி, தாளவாடி உள்பட புறநகர் பகுதியில் 93 இடங்களிலும், ஈரோடு மாநகர் பகுதியில் 20 இடங்களிலும் என மொத்தம் மாவட்டம் முழுவதும் 113 இடங்களில் 19 ஆயிரத்து 550 பேருக்கு நேற்று கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு போடப்பட்டது.
வழக்கம்போல் தடுப்பூசி போடும் மையங்களில் அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று இடம் பிடித்தனர். ஒவ்வொரு மையங்களிலும் டோக்கன் அடிப்படையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் டோக்கன் கிடைக்காத பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Next Story