தமிழகத்தில் 1,756 பேருக்கு கொரோனா: சென்னை, கோவையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு


தமிழகத்தில் 1,756 பேருக்கு கொரோனா: சென்னை, கோவையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரிப்பு
x
தினத்தந்தி 29 July 2021 1:23 AM GMT (Updated: 29 July 2021 1:23 AM GMT)

தமிழகத்தில் நேற்று 1,756 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னை, கோவையில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 55 ஆயிரத்து 199 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,005 ஆண்கள், 751 பெண்கள் என மொத்தம் 1,756 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 179 பேரும், ஈரோட்டில் 140 பேரும், சென்னையில் 164 பேரும், செங்கல்பட்டில் 117 பேரும், தஞ்சாவூரில் 78 பேரும், சேலத்தில் 92 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக திருவண்ணாமலை, பெரம்பலூரில் தலா 7 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஒருவருக்கும், 12 வயதுக்குட்பட்ட 96 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 248 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.

29 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 14 லட்சத்து 92 ஆயிரத்து 89 ஆண்களும், 10 லட்சத்து 61 ஆயிரத்து 678 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 53 ஆயிரத்து 805 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 21 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 8 பேரும் என 29 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சேலத்தில் 5 பேரும், கோவையில் 4 பேரும், கடலூர், சென்னையில் தலா 3 பேரும் உள்பட நேற்று மட்டும் 16 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 22 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 995 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2,394 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழக அரசு ஆஸ்பத்திரிகளில் மொத்தம் 72 ஆயிரத்து 285 படுக்கைகள் காலியாக உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து 2,394 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 21 ஆயிரத்து 521 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story