சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை தாம்பரம் மார்க்கெட் வருகிற 9-ந் தேதி வரை மூடல்


சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை தாம்பரம் மார்க்கெட் வருகிற 9-ந் தேதி வரை மூடல்
x
தினத்தந்தி 1 Aug 2021 9:46 AM GMT (Updated: 1 Aug 2021 9:46 AM GMT)

சென்னை புறநகர் பகுதிகளில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியான தாம்பரம் மார்க்கெட் வருகிற 9-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்,

தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று தணிந்த நிலையில், கடந்த 2 நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சென்னை புறநகரில் ஒட்டியுள்ள பகுதிகளில் கொரோனா தொற்று பரவ அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

மார்க்கெட் மூடல்

அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதியான தாம்பரம் மார்க்கெட் பகுதி முன்னெச்சரிக்கையாக வருகிற 9-ந் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல் ரசாக் சாலை, புது மார்க்கெட் பகுதி, காய்கறி கடைகள், மீன் கடைகள், இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மார்க்கெட் நுழைவுபகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தவே தாம்பரம் மார்க்கெட் பகுதி மூட உத்தரவிட்டுள்ளதாகவும், நோய் பரவலை கட்டுப்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Next Story