280 முதியவர்கள் உள்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா


280 முதியவர்கள் உள்பட தமிழகத்தில் 1,957 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 3 Aug 2021 12:35 PM GMT (Updated: 3 Aug 2021 12:35 PM GMT)

தமிழகத்தில் 280 முதியவர்கள் உள்பட 1,957 பேருக்கு நேற்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்று (திங்கட்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 44 ஆயிரத்து 632 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,099 ஆண்கள், 858 பெண்கள் என மொத்தம் 1,957 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 219 பேரும், சென்னையில் 189 பேரும், ஈரோட்டில் 168 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 8 பேரும், பெரம்பலூரில் 7 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 109 குழந்தைகளும், 13 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 1,568 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 280 பேரும் அடக்கம்.

28 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 68 லட்சத்து 75 ஆயிரத்து 435 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 14 லட்சத்து 97 ஆயிரத்து 577 ஆண்களும், 10 லட்சத்து 65 ஆயிரத்து 929 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 63 ஆயிரத்து 544 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 93 ஆயிரத்து 916 குழந்தைகளும், 13 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 21 லட்சத்து 264 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 69 ஆயிரத்து 364 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 23 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 5 பேரும் என 28 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 பேரும், சேலத்தில் 4 பேரும், சென்னை, திருவாரூர், திருவள்ளூரில் தலா 3 பேரும், திருச்சி, செங்கல்பட்டு, புதுக்கோட்டையில் தலா இருவரும், தூத்துக்குடி, ராமநாதபுரம், நீலகிரி, திண்டுக்கலில் தலா ஒருவரும் என 12 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 130 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2,068 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு பரிசோதனை செய்பவர்களில் 1.3 சதவீதம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக தஞ்சாவூரில் 3.2 சதவீதம் பேரும், அரியலூரில் 2.2 சதவீதம் பேரும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 443 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 453 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 516 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 71,412 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2,068 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 174 பேரும், தஞ்சாவூரில் 142 பேரும், சென்னையில் 132 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 9 ஆயிரத்து 29 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 385 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story