பெண்கள் இலவச பயண இழப்பை ஈடுசெய்ய அரசு பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்


பெண்கள் இலவச பயண இழப்பை ஈடுசெய்ய அரசு பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
x
தினத்தந்தி 3 Aug 2021 2:14 PM GMT (Updated: 3 Aug 2021 2:14 PM GMT)

பெண்கள் இலவச பயண இழப்பை ஈடுசெய்ய அரசு பஸ்களில் ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை,

அரசு உள்ளூர் பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி வழங்கப்படும் என்ற தி.மு.க. வாக்குறுதியின்படி, நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சில பகுதிகளில், பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படும் பஸ்களில், அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது என்றும், இதற்கு முன் ரூ.5 என்பதுதான் குறைந்தபட்ச கட்டணமாக இருந்தது என்றும், சட்டத்துக்குப் புறம்பாக அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகம் கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது என்றும், இதுகுறித்து போக்குவரத்துக்கழக நிர்வாகத்திடம் தொடர்புகொண்டு கேட்டபோது, தவறு சரிசெய்யப்படும் என்று பதில் அளித்ததாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

விதிமீறல்கள்

மேலும், நகர்ப்புற பஸ்களைவிட புறநகர் பஸ்களில் கட்டணம் அதிகம் என்றும், நகர்ப்புற பஸ்களில் மட்டுமே பெண்கள் இலவசப் பயணத்துக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் பஸ்களிலும் ‘மகளிர் இலவசம்’ என்ற பலகை வைக்கப்பட்டு இருப்பதாகவும், பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஆண்களுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.5 என்பதற்குப் பதிலாக ரூ.10 ஆக வசூலிக்கப்படுவதாகவும், இலவச பெண்கள் பயணத்தை அனுமதிக்கும் நகர்ப்புற பஸ்களிலும் ஆண்களிடம் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.10 வசூலிக்கப்படுகிறது என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதுபோன்ற விதிமீறல்கள், திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ராமச்சேரி, காஞ்சிப்பாடி, திருவாலங்காடு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழித்தடங்களில் சர்வசாதாரணமாக நடைபெறுவதாகவும், புறநகர் பஸ்களில் சாதாரண மற்றும் விரைவு பஸ்கள் என இருவகைகள் இருக்கின்றன என்றும், விரைவு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டாலும் அந்த பஸ்கள் பெரும்பாலும் அனைத்து பஸ் நிறுத்தத்திலும் நிறுத்தப்படுவதாகவும், பயண நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவிப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. இதேமுறையை தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் கடைப்பிடிப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

கண்டனம்

பெண்களுக்கு இலவச பயணம் என்று அறிவித்துவிட்டு, அந்த இழப்பை ஈடுசெய்ய ஆண்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கான புதிய உத்திகளை அரசு போக்குவரத்து கழகங்கள் கடைப்பிடிப்பது அரசாணைக்கு எதிரான செயல். இது அரசாங்கத்துக்கு, ஆட்சியாளர்களுக்கு தெரிந்து நடக்கிறதா அல்லது தெரியாமல் நடக்கிறதா என்று தெரியவில்லை. இதுபோன்ற கட்டண வசூல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

எனவே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாகத் தலையிட்டு, பெண்களுக்கான இலவச பயணத்தால் ஏற்படும் இழப்பு ஆண்கள் தலையில் சுமத்தப்படுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story