11 மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு: தமிழகத்தில் 1,908 பேருக்கு கொரோனா


11 மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு: தமிழகத்தில் 1,908 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 4 Aug 2021 2:23 PM GMT (Updated: 4 Aug 2021 2:23 PM GMT)

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நேற்று தொற்று பாதிப்பு உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,908 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 44 ஆயிரத்து 903 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,104 ஆண்கள், 804 பெண்கள் என மொத்தம் 1,908 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக கோவையில் 208 பேரும், ஈரோட்டில் 181 பேரும், சென்னையில் 203 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 6 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதில் 12 வயதுக்குட்பட்ட 122 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 272 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னை, கடலூர், ஈரோடு உள்பட 11 மாவட்டங்களில் பாதிப்பு சற்று உயர்ந்துள்ளது.

29 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரத்து 338 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 98 ஆயிரத்து 681 ஆண்களும், 10 லட்சத்து 66 ஆயிரத்து 733 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 65 ஆயிரத்து 452 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 94 ஆயிரத்து 38 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 69 ஆயிரத்து 636 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 23 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 6 பேரும் என 29 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக திருப்பூரில் 5 பேரும், சேலம், கோவையில் தலா 4 பேரும் உள்பட ஒருவரும் என 16 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 159 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

2,047 பேர் ‘டிஸ்சார்ஜ்’

தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 319 ஆக்சிஜன் படுக்கைகள், 24 ஆயிரத்து 323 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 473 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 71 ஆயிரத்து 115 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 2,047 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 169 பேரும், தஞ்சாவூரில் 129 பேரும், திருப்பூரில் 124 பேரும் அடங்குவர். இதுவரையில் 25 லட்சத்து 11 ஆயிரத்து 76 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 217 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story