திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா


திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா
x
தினத்தந்தி 12 Aug 2021 9:14 PM GMT (Updated: 12 Aug 2021 9:14 PM GMT)

திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்துகளை அபகரித்து விட்டு மகன்கள் கைவிட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.

திருமங்கலம்,

திருமங்கலம் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு மூதாட்டி தர்ணா போராட்டம் நடத்தினார். சொத்துகளை அபகரித்து விட்டு மகன்கள் கைவிட்டதாக அவர் புகார் தெரிவித்தார்.

சொத்துகள்

கள்ளிக்குடி அருகே உள்ள சோளம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி சரோஜா(வயது 65). இவருக்கு கோபாலகிருஷ்ணன்(45), பாலகிருஷ்ணன்(43) ஆகிய 2 மகன்களும், மகேஸ்வரி(35) என்ற மகளும் உள்ளனர். சரோஜாவின் கணவர் கந்தசாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.
கந்தசாமி உயிருடன் இருக்கும் பொழுது வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துக்களை மகன்கள் பெயரில் தானம் செட்டில்மென்ட் பத்திரம் எழுதி கொடுத்து விட்டார். தற்போது கணவர் வசித்த வீட்டில் சரோஜா வசித்து வருகிறார். மகன்கள் எந்தவித உதவியும் ஜீவனாம்சமும் வழங்குவதில்லை. காரியாபட்டியில் குடியிருக்கும் மகள் மகேஸ்வரி அவ்வப்போது உதவி செய்து வந்துள்ளார்.

மூதாட்டி தர்ணா

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரியாபட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு சரோஜா சென்றார். மீண்டும் சோளம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு வந்தபோது அவரது மகன் கோபாலகிருஷ்ணன் வீட்டைப் பூட்டி வைத்துக் கொண்டு சாவியை தர மறுத்து வெளியே துரத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தங்க வழியின்றி உணவின்றி சரோஜா அவதிப்பட்டு வந்தார்.
பின்னர் அவர் நேற்று மாலை தனது மகளுடன் திருமங்கலம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அலுவலகத்தில் திடீரென்று அவர் கோட்டாட்சியரின் ஜீப் முன்பு உட்கார்ந்து திடீர் தர்ணா போராட்டம் நடத்தினார்.

நடவடிக்கை

இது பற்றி அறிந்ததும் கோட்டாட்சியர் அனிதா சம்பவ இடத்துக்கு வந்து மூதாட்டி சரோஜாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், தனது மகன்கள் இருவரும் வீடு, நிலம் உள்ளிட்ட சொத்துகளை எழுதி வாங்கி கொண்டு தன்னை வீட்டை விட்டு துரத்தி விட்டதாகவும், ஜீவனாம்சம் கூட தருவதில்லை. எனவே சொத்துகளை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
இதற்கு கோட்டாட்சியர் அனிதா, மகன்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அந்த மூதாட்டி அங்கிருந்து கலைந்து சென்றார்.

Next Story