குடும்பத்தகராறு மனைவி கழுத்தை அறுத்துக்கொலை கணவரும் தற்கொலை முயற்சி


குடும்பத்தகராறு மனைவி கழுத்தை அறுத்துக்கொலை கணவரும் தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 16 Aug 2021 4:41 AM GMT (Updated: 16 Aug 2021 4:41 AM GMT)

குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.

வாலாஜாபாத்,

நெல்லை மாவட்டம் சிவகிரி காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 27). இவரும் நெல்லை மாவட்டம் சேந்தமங்கலம் பகுதியை சேர்ந்த அனு (21) என்பவரும் காதலித்து கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. பாலமுருகனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும், தன்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டதும் அனுவுக்கு தெரியவந்தது. மேலும் பாலமுருகன் சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றி திரிந்து வந்தார்.

வேலைக்கு செல்வதற்காக...

இதன் காரணமாக குடும்பம் நடத்த முடியாமல் அனுவுக்கும், பாலமுருகனுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் அனு பாலமுருகனை பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அனு தனக்கும், தன் குழந்தைக்கும் பிழைக்க வருமானம் வேண்டி வேலை தேடிய நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை கிடைத்தது. வேலைக்கு செல்வதற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கைக்குழந்தையை தாயின் வீட்டில் விட்டுவிட்டு ஒரகடம் வந்தார்.

தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த புளியம்பாக்கத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் செயல்பட்டுவரும் தொழிற்சாலையின் பெண்கள் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கொலை

இதை அறிந்து கொண்ட கணவர் பாலமுருகன் புளியம்பாக்கத்தில் உள்ள தங்கும் விடுதிக்கு வந்து மனைவியை வெளியே அழைத்து சமாதானம் செய்ய முயன்றார். கணவன், மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது பாலமுருகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திடீரென அனுவின் கழுத்தை சரமாரியாக அறுத்து விட்டு தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயன்றார். கழுத்து அறுபட்ட அனு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து உடனடியாக தங்கும் விடுதி காவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வாலாஜாபாத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய பாலமுருகனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அனுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story