மேலே சென்ற வயர் மீது லாரி உரசியதால் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி


மேலே சென்ற வயர் மீது லாரி உரசியதால் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி
x
தினத்தந்தி 17 Aug 2021 8:15 AM GMT (Updated: 17 Aug 2021 8:15 AM GMT)

படப்பை அருகே மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயர் மீது லாரியின் டிப்பர் உரசியதால் மின்சாரம் பாய்ந்து டிரைவர் பலியானார்.

படப்பை,

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமம் கற்பக சுந்தர விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவருடைய மகன் வேல்முருகன் (வயது 35). டிரைவரான இவர், காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த எருமையூரிலுள்ள குவாரியில் கடந்த 10 நாட்களுக்கு முன் லாரி டிரைவராக சேர்ந்து லாரியை ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் லாரியை கழுவி சுத்தம் செய்வதற்காக கிரீஸ் அடிப்பதற்காக லாரியின் டிப்பர் கம்ப்ரசர் மூலம் தூக்கிவிட்டு லாரியில் இருந்து இறங்கியுள்ளார்.

அப்போது லாரிக்கு மேலே சென்று கொண்டிருந்த மின்சார வயர் மீது லாரியின் டிப்பர் பட்டு லாரி முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது.

பரிதாப சாவு

இதை கவனிக்காத வேல்முருகன் லாரியை தொட்டபோது மின்சாரம் தாக்கி விழுந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வேல்முருகனை மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சேர்த்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story