ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைப்பு


ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கடைகள் அடைப்பு
x
தினத்தந்தி 21 Aug 2021 3:27 PM GMT (Updated: 21 Aug 2021 3:27 PM GMT)

ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
புதிய கட்டுப்பாடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 9-ந்தேதி முதல் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார். அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை, காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள கீழ்க்காணும் பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர பிற கடைகள் அனைத்தும் நேற்றும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) இயங்க முழுமையாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
24 பகுதிகளில் கடைகள் அடைப்பு
அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ். தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகள் உள்பட மாவட்டத்தில் மொத்தம் 24 பகுதிகளில் நேற்று அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
இதன் காரணமாக ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு பகுதிகளில் நேற்று மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதைப்போல் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட்டும் நேற்று மூடப்பட்டிருந்தது. இந்த பகுதியில் அத்தியாவசிய கடைகள் மட்டுமே திறந்திருந்தன. மாநகராட்சி அலுவலர்கள் முக்கிய வீதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணித்தனர். மேலும் தடை விதிக்கப்பட்டுள்ள 24 இடங்களில் செயல்படும் 12 டாஸ்மாக் கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.

Next Story