கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைப்பு; முக்கிய வீதிகள் வெறிச்சோடின


கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைப்பு; முக்கிய வீதிகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 22 Aug 2021 9:05 PM GMT (Updated: 22 Aug 2021 9:05 PM GMT)

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோட்டில் கடைகள் அடைக்கப்பட்டன. முக்கிய வீதிகள் வெறிச்சோடின.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகை கடை, காய்கறி கடைகள், உணவகங்கள் ஆகியவை தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஈரோடு மாநகர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளாக ஈஸ்வரன் கோவில் வீதி, டி.வி.எஸ் தெரு, காந்திஜி ரோடு, பிருந்தா வீதி, பழைய சென்ட்ரல் தியேட்டர் ரோடு, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, மேட்டூர் ரோடு, ஸ்டோனி பாலம், வ.உ.சி பூங்கா, காவிரி ரோடு ஆகிய பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 24 பகுதிகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன.
இதன் காரணமாக எப்போதும் பரபரப்பாக காணப்படும், ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா போன்ற பகுதிகளில் நேற்று மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தது. இதேபோல் கோபி, பவானி, சத்தியமங்கலம், தாளவாடி, புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டு இருந்தன. மாவட்ட நிர்வாகம் உத்தரவை மீறி கடைகள் எங்கேனும் திறக்கப்பட்டுள்ளதா? என அதிகாரிகள் கண்காணித்தனர்.

Next Story