குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை


குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 27 Aug 2021 9:06 PM GMT (Updated: 27 Aug 2021 9:06 PM GMT)

குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு
குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்ட வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
ரூ.65 கோடி பாக்கி
ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம், காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி முருகேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் முனுசாமி பேசும்போது, ‘தனியார் சர்க்கரை ஆலை விவசாயிகளிடம் கரும்பு வெட்டி, 120 நாட்களுக்கு மேல் ஆகியும் ரூ.65 கோடி பாக்கி வைத்துள்ளது. கடந்த மாதம் 28-ந்தேதி ஆலை முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தியபோது, கோபி ஆர்.டி.ஓ. பேச்சுவார்த்தை நடத்தி, 15 நாட்களில் பணம் பெற்றுத்தருவதாக கூறினார். ஆனால் இன்று வரை பணம் கிடைக்கவில்லை. கரும்பு கட்டுப்பாட்டு சட்டப்படி, 15 நாட்களுக்குள் பணம் தராவிட்டால், 15 சதவீத வட்டியுடன் மாவட்ட நிர்வாகம் பெற்றுத்தர வழி உள்ளது. இதை செயல்படுத்த வேண்டும், உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டு உள்ள இடத்துக்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும்’ என்றார்.
இழப்பீடு
மலைவாழ் மக்கள் நலச்சங்க பிரதிநிதி குணசேகரன் பேசும்போது, ‘ஆசனூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் சீமார்புல் சேகரிக்க செல்வோருக்கு, அங்கேயே தங்கி பணி செய்ய வசதி செய்து தர வேண்டும். அந்தியூர் பெரிய ஏரிக்கு நீர் வரும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆப்பக்கூடலில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை நிலக்கரி கழிவு சாம்பலால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கும், விலங்குகளுக்கும் உரிய இழப்பீட்டை அரசு பெற்றுத்தரவேண்டும். தூய்மை காவலர்களுக்கு கடந்த ஜூலை முதல் இன்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை. அவர்களுக்கு நேரடியாக மாவட்ட நிர்வாகம் சம்பளம் வழங்க வேண்டும்’ என்றார்.
கீழ்பவானி பாசன விவசாயிகள் சங்க தலைவர் நல்லசாமி பேசும்போது, ‘கீழ்பவானி வாய்க்கால் கரை பகுதி முழுவதும் ஆக்கிரமிப்பாக உள்ளது. கரைகளில் பனங்கொட்டைகளை நட்டால் ஆக்கிரமிப்பை தவிர்க்கலாம். பயிர் கடன் தள்ளுபடியான விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியில் கடன் தருவதில்லை. கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அடங்கல் பெற்று வர கூறுகின்றனர். ஆனால் கிராம நிர்வாக அதிகாரிகள் கிராமங்களில் இருப்பதில்லை என்பதால் கடன் பெற முடியாத நிலை உள்ளது. இதுபற்றி மாவட்ட வருவாய் அதிகாரி, கூட்டுறவு அதிகாரிகளிடம் பேசி, கடன் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் ஒரே இடத்தில் மஞ்சள் வணிக வளாகம் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்.
தடுப்பணை
தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்க தலைவர் சுதந்திரராசு பேசும்போது, ‘மரவள்ளி கிழங்கு பயிரில் வெள்ளை மாவு பூச்சி தாக்குதல் காரணமாக விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. ஒரு டன் கரும்பில் இருந்து 250 லிட்டர் எத்தனால் எடுக்கலாம். ஆனால் ஒரு டன் மரவள்ளி கிழங்கில் இருந்து 300 லிட்டர் எத்தனால் எடுக்க முடியும். ஒரு லிட்டர் எத்தனால் ரூ.70-க்கு மேல் விற்பனை ஆவதால், அதன் மூலம் விவசாயிகளுக்கு ரூ.20 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். எனவே விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் வழங்க மறுப்பதால், அடங்கல் பெறாமல் மாற்று ஆவணங்கள் மூலம் தடையின்றி கடன் வழங்கினால் மட்டுமே, பயிர் சாகுபடியை தொடங்க முடியும். பிரதமரின் கிசான் உதவித்தொகை திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்குவதை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்துக்கு தகுதியானவர்களை வேளாண் துறையும் தேர்வு செய்து, விவசாய பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். மொடக்குறிச்சி, கொடுமுடி பகுதியில், குரங்கன் ஓடையில் 3 இடங்களில் தடுப்பணை கட்டினால், அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும்’ என்றார்.
தரமற்ற கட்டுமானம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி பேசும்போது, ‘தரமற்ற கட்டுமானத்தால் தான் கீழ்பவானி வாய்க்கால் உடைந்தது. நள்ளிரவில் உடைந்திருந்தால், ஏராளமானோர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருப்பார்கள். இதேபோலத்தான் இன்னும், 30 இடங்களில் தரமற்ற கட்டுமானம் நடந்துள்ளது. தற்போது 1,000 கனஅடி மட்டுமே தண்ணீர் திறக்கப்பட்டது. தரம் பரிசோதிக்காமல் 2 ஆயிரத்து 300 கனஅடி நீர் திறந்திருந்தால், வாய்க்கால் முற்றிலும் சீரழிந்து போவதுடன், கிராமங்கள், வயல் வெளிகள் அழிந்துவிடும். போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு செய்வதுடன், விவசாயிகள் கருத்து கேட்டு மீண்டும் பணி செய்ய வேண்டும்’ என்றார்.
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு துணை தலைவர் ராமசாமி பேசும்போது, ‘கீழ்பவானி வாய்க்கால் சேதமடைந்துள்ளதால், முழுமையாக சீரமைத்த பின்னரே தண்ணீர் திறக்க வேண்டும். முன்னதாக அதிகாரிகள், விவசாயிகள் அடங்கிய குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும்’ என்றார்.
நெல் கொள்முதல் நிலையம்
அதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் தற்போது வரை 30 ஆயிரத்து 74 ஏக்கரில் வேளாண் பயிர்களும், 32 ஆயிரத்து 877 ஏக்கரில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு உள்ளன. நடப்பாண்டில் நெல் விதை 64 டன், சிறு தானியங்கள் 2 டன், பயறு வகை 7 டன், எண்ணெய் வித்துக்கள் 56 டன் வினியோகிக்கப்பட்டு உள்ளது. ரசாயன உரங்களான யூரியா 9 ஆயிரத்து 927 டன், டி.ஏ.பி. 5 ஆயிரத்து 136 டன், பொட்டாஷ் 4 ஆயிரத்து 393 டன், காம்ப்ளக்ஸ் 11 ஆயிரத்து 524 டன் வினியோகிக்கப்பட்டு உள்ளது. தற்போது போதுமான அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளன.
நுண்ணீர் பாசன திட்டத்தில் வேளாண் துறைக்கு 2 ஆயிரத்து 450 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 550 ஏக்கர் இலக்கு எட்டப்பட்டு உள்ளது. தோட்டக்கலைத்துறையின் மூலம் நுண்ணீர் பாசன திட்டத்தில் 3 ஆயிரத்து 600 ஏக்கர் இலக்கு நிர்ணயித்து, 454 ஏக்கர் இலக்கு எட்டப்பட்டுள்ளது. தடப்பள்ளி  அரக்கன்கோட்டை பாசனப்பகுதியில் நாளை (அதாவது இன்று) முதல் 31 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story