ஆர்.கே.பேட்டையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து கர்ப்பிணி தற்கொலை போலீசார் விசாரணை


ஆர்.கே.பேட்டையில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து கர்ப்பிணி தற்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 5 Sep 2021 6:42 AM GMT (Updated: 5 Sep 2021 6:42 AM GMT)

ஆர்.கே.பேட்டையில் தீராத வயிற்று வலி காரணமாக 4 மாத கர்ப்பிணி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், அமுதா ரெட்டி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 42). இவரது மனைவி அம்லு (35). இவர்களது மகள் புனிதா (22).

புனிதாவுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே கிராமத்தைச் சேர்ந்த தனது உறவினர் ஜெயவேல் (27) என்பவருடன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் குழந்தை உள்ளது. 4 மாத கர்ப்பிணியான புனிதா கர்ப்பம் தரித்த நிலையில், தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு நேற்று மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டதால், வலியை பொறுக்க முடியாத புனிதா வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்.

கருகி சாவு

இதில் தீ உடல் முழுவதும் மளமளவென பரவியதில் உடல் கருகிய புனிதா அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புனிதாவின் தாயார் அம்லு ஆர்.கே. பேட்டை போலீசில் தகவல் தெரிவித்தார். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து புனிதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆர்.கே. பேட்டை போலீசார் அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story