விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது


விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்க ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது
x
தினத்தந்தி 7 Sep 2021 6:03 AM GMT (Updated: 7 Sep 2021 6:03 AM GMT)

கும்மிடிப்பூண்டியில் விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின் ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தபால் தெருவை சேர்ந்த வேலு (வயது 45). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி வள்ளியம்மாள் (38), தனது பெயரிலான விவசாய நிலத்திற்கு கும்மிடிப்பூண்டி துணை மின் நிலையத்தில் மின் இணைப்புக்கான அனுமதி கோரியிருந்தார். அதற்காக ரூ.43,350-ஐ ஏற்கனவே கட்டணமாக மின் அலுவலகத்தில் செலுத்தி உள்ளார்.இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி நகர்புற முதல் நிலை மின் முகவர் (போர்மேன்) சீனு (53) என்பவர் இணைப்பிற்கு லஞ்சமாக கூடுதலாக ரூ.18 ஆயிரம் கேட்டு உள்ளார். மேலும் லஞ்சம் தராததால் மின் இணைப்பு கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனால் வேலுவும், அவரது மனைவி வள்ளியம்மாளும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்த நிலையில், இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் ஆதாரபூர்வமாக வேலு புகார் தெரிவித்தார்.

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

இந்த நிலையில் நேற்று மாலை, மின்ஊழியர் சீனு கூறியபடி, முதல் கட்டமாக கும்மிடிப்பூண்டி துணை மின்நிலையத்தின் அருகே உள்ள டீக்கடை ஒன்றில் ரூ.5 ஆயிரத்தை வேலு கொடுத்தார். சிறிது நேரத்தில் அந்த கடைக்கு வந்த சீனு, மேற்கண்ட லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டு மின் நிலையம் வந்தார். பின்னர் தனது காரில் ஏறி பொன்னேரியில் உள்ள தனது வீட்டிற்கு அவர் புறப்பட முயன்றார்.

அப்போது, அங்கு மறைந்திருந்த சென்னை ஆலந்தூர் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி காந்தன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் மின் ஊழியர் சீனுவை மடக்கி பிடித்தனர். அவரிடம் கொடுக்கப்பட்ட ரசாயனம் கலந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும் அவர்கள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து மின்ஊழியர் சீனுவை, நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story