பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம்; போக்சோ சட்டத்தில் லாரி டிரைவர் கைது


பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம்; போக்சோ சட்டத்தில்  லாரி டிரைவர் கைது
x
தினத்தந்தி 7 Sep 2021 9:31 PM GMT (Updated: 7 Sep 2021 9:31 PM GMT)

நம்பியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம் செய்த ரிக் லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

நம்பியூர் அருகே பிளஸ்-1 மாணவியை கடத்தி 3-வது திருமணம் செய்த ரிக் லாரி டிரைவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி டிரைவர்
நம்பியூர் அருகே உள்ள பூச்சி நாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 37). ரிக் லாரி டிரைவர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 மனைவிகள் மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ரவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் முதல் மனைவி வசித்து வருகிறார். இதனால் ரவியுடன் 2-வது மனைவி வசித்து வருகிறார்.
பிளஸ்-1 மாணவியுடன் பழக்கம்
இந்த நிலையில் ரவிக்கும், நம்பியூர் பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் 2 பேரும் செல்போனில் பேசி வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த மாணவியிடம் தான் காதலிப்பதாக ரவி ஆசை வார்த்தைக்கூறி உள்ளார். 
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மாணவியை கடத்தி சென்று 3-வதாக திருமணம் செய்து கொண்டார். 
கைது
இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் நம்பியூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், ‘ஆசை வார்த்தைக்கூறி அந்த மாணவியை ரவி கடத்தி சென்று திருமணம் செய்தது,’ தெரிய வந்தது. 
இதைத்தொடர்ந்து நம்பியூர் அருகே உள்ள குருமந்தூர் பகுதியில் பதுங்கி இருந்த ரவியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து மாணவியையும் மீட்டனர். 
இந்த சம்பவம் அந்த பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story