கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன்


கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன்
x
தினத்தந்தி 8 Sep 2021 6:46 PM GMT (Updated: 8 Sep 2021 6:46 PM GMT)

உசிலம்பட்டி அருகே தாயின் கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

உசிலம்பட்டி,

உசிலம்பட்டி அருகே தாயின் கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

குடிநீர் தொட்டி ஆபரேட்டர்

மதுரை மாவட்டம், எழுமலை அருகே உள்ள கோடாங்கி நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் மொக்கராசு(வயது 72). இவருடைய மனைவி பெருமாயி (69). இவர்களுக்கு 2 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். .இதில் மூத்த மகன் வெல்ட் ரமேஷ்(40). இவர் அதே ஊரில் உள்ள குடிநீர் தொட்டியில் ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
ஆனால் இவரது சகோதரிகள் 2 பேருக்கும், தம்பிக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி விட்டது. தந்தை மொக்கராசு இறந்ததால் ரமேஷ், தாயார் பெருமாயியுடன் வசித்து வந்தார்.

மிதித்து கொலை

ரமேஷ் மது குடிப்பது வழக்கம். இதை அவரது தாயார் கண்டித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மது அருந்துவதற்காக தனது தாயார் பெருமாயியிடம், பணம் கேட்டார். அதற்கு அவர் பணம் கொடுக்க மறுத்து உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ் தனது தாயை தாக்கி கீழே தள்ளினார். அவரது கழுத்தில் தனது காலால் ஓங்கி மிதித்தார். இதில் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பெருமாயி இறந்தார்.

கைது

இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். இது குறித்து எழுமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெருமாயி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அவரது மகன்  ரமேசை கைது செய்தனர்.
மது குடிக்க பணம் தராததால் பெற்ற தாயை மகனே ெகாடூரமாக கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story