கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை


கணவன்-மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Sep 2021 5:30 PM GMT (Updated: 9 Sep 2021 5:30 PM GMT)

விஜயமங்கலம் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு குடும்ப தகராறில் கணவனும், மனைவியும் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டனர்.

விஜயமங்கலம் அருகே 2 குழந்தைகளை தவிக்க விட்டு குடும்ப தகராறில் கணவனும், மனைவியும் தூக்குப்போட்டு் தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காதல் திருமணம்
திருச்சி லால்குடியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 30). திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள காட்டேகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் மீனா (26).  இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தனர். அப்போது பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர்  விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தனர். இவர்களுக்கு துஸ்யந்த் (6) என்ற மகனும், காவியஸ்ரீ (2) என்ற மகளும் உள்ளனர்.
மதுபழக்கம்
ராஜ்குமாரும், மீனாவும் ஆரம்பத்தில் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ராஜ்குமார் திடீரென குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் தினமும் மது குடித்துவிட்டு் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால், கணவன்-மனைவி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக மீனா தனது 2 குழந்தைகளையும், கடந்த 6-ந் தேதி அன்று, ஊத்துக்குளியில் உள்ள தனது மாமா வீட்டில் விட்டுவிட்டு, மேட்டுப்புதூருக்கு திரும்பி வந்து ராஜ்குமாருடன் குடும்பம் நடத்தி வந்தார்.
தூக்கில் தொங்கினர்
இந்த நிலையில் நேற்று காலை ராஜ்குமாரின் வீடு வெகுநேரமாக திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று கதவை தட்டிப்பார்த்தனர். ஆனால் திறக்கவில்லை. இதனால் கதவை திறந்து பார்த்தபோது, வீட்டின் உத்திரத்தில் ராஜ்குமாரும், மீனாவும் தனி தனி சேலையில் தூக்குப்போட்டு பிணமாக தொங்கி கொண்டிருந்தனர். இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே இதுபற்றி பெருந்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை
இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், ராஜ்குமாரும், மீனாவும் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 2 குழந்தைகளையும் தவிக்க விட்டு, பெற்றோர் இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story