ஈரோடு மாவட்டத்தில் நாளை 847 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்; 1 லட்சம் பேருக்கு செலுத்தப்படுகிறது


ஈரோடு மாவட்டத்தில் நாளை 847 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்; 1 லட்சம் பேருக்கு செலுத்தப்படுகிறது
x
தினத்தந்தி 10 Sep 2021 9:01 PM GMT (Updated: 10 Sep 2021 9:01 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

ஈரோடு
ஈரோடு மாவட்டத்தில் 847 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதில் ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தடுப்பூசி சிறப்பு முகாம்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் வருகிற 12-ந் தேதி (அதாவது நாளை ஞாயிற்றுக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட உள்ளது. இந்த முகாம் ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள், பள்ளிக்கூடங்கள்ள உள்பட 847 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. இதில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 400 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் இலவசமாக செலுத்தப்பட உள்ளது.
பக்க விளைவு ஏற்படாது
இந்த முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3 ஆயிரம் பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற தொற்றா நோய்களுக்கு சிகிச்சை எடுத்து கொள்பவர்களுக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்திய பின்பு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை என மருத்துவ நிபுணர் குழு அறிவித்து உள்ளது.
எனவே, ஈரோடு மாவட்ட பொதுமக்கள் இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் பங்கேற்று 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை செலுத்தி கொண்டு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களது பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பிரத்திக் தயாள், மாநகராட்சிஆணையாளர் இளங்கோவன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பாலாஜி, ஆர்.டி.ஓ.க்கள் பிரேமலதா (ஈரோடு), பழனிதேவி (கோபி), சுகாதார பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம், மாநகராட்சி நகர்நல அதிகாரி முரளிசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story